குழந்தையின் விளையாட்டு வெறும் விளையாட்டு அல்ல என்கிறார் டாக்டர் ஸ்பாக். குழந்தை விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது ஏதோ பொழுது போக்க, அல்லது மனமகிழ்விற்காக விளையாடுவதாகத் தோன்றும். நாம் அதை பெரியவர்கள் பார்வையில் பார்க்கும்போது அதற்கு அத்தனை முக்கியத்துவம் இருக்காது. ஒரு சின்ன பொம்மையை வைத்துக் கொண்டு அம்மா, அப்பா என்றெல்லாம் சொல்லும்போது நாம் அதை ரொம்பவும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை.

 

ஆனால் குழந்தையின் விளையாட்டுக்கள் வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொள்ளவே என்கிறார் டாக்டர் ஸ்பாக். பிற்காலத்தில் தாம் வாழப் போகும் வாழ்க்கைக்குத் தம்மை தயார் செய்துகொள்ளவே குழந்தைகள் விளையாடுகிறார்கள். குழந்தைகள் எளிதாக விளையாடுவதாக நாம் நினைக்கிறோம்; ஆனால் அவர்களுக்கு விளையாட்டு பிடிப்பதற்குக் காரணம் அது ‘கஷ்டம்’ ஆக இருப்பதனால்தான். ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவன் எத்தனை கஷ்டப்பட்டு ‘ஜியோமெட்ரி’ யைக் கற்றுக் கொள்ளுகிறானோ அதே தீவிரத்துடன் குழந்தைகள் விளையாட்டினை திரும்பத்திரும்ப விளையாடி அதன் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்ளுகிறார்கள்.

 

என் பிள்ளை சின்ன வயதில் கையில் எது கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு கார் ஓட்ட ஆரம்பித்துவிடுவான். பென்சில், அழிப்பான், ஸ்கேல் என்று எல்லாமே அவன் கையில் கார் ஆக மாறும். விளயாடுவதற்குமுன் தனது விளையாட்டு சாமான்களில் சிலவற்றை அங்கங்கே வைப்பான். இவனது கார் அந்த சாமான்களைச் சுற்றி, அவற்றின் மேல் மோதாமல் ஓடும். சிலசமயம் அவற்றின் அருகே போகும்போது ‘கீய்ங்……’ என்று சடன் ப்ரேக் போடுவான். தூரத்தில் வரும்போது ஹார்ன் அடிப்பான். அவன் விளையாடுவதை வியப்புடன் அன்று நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

 

அவன் கார் சிலசமயம் என் கால் அருகிலும் வரும். ஹார்ன் சத்தம் அல்லது ‘கீய்ங்க்‘ என்ற சடன் ப்ரேக் ஏதாவது ஒன்றை செய்வான். ‘எப்போ பார்த்தாலும் என்னடா கார் விளையாட்டு?’ என்று கோபித்துக் கொள்வேன். அவன் இன்று மிகவும் லாவகமாக இரண்டு சக்கர வண்டியோ, நான்கு சக்கர வண்டியோ ஓட்டும்போது டாக்டர் ஸ்பாக் நினைவுக்கு வருகிறார். அவனது திறமைக்கு இந்த சின்ன வயது விளையாட்டும் காரணம் என்று டாக்டர் ஸ்பாக் சொல்வது புரிகிறது.

 

இன்னொரு விஷயத்தையும் டாக்டர் ஸ்பாக் சொல்லுகிறார்: நீங்கள் மிகவும் விலையுயர்ந்த விளையாட்டு சாமான்களை வாங்க வேண்டும் என்பதில்லை. குழந்தைக்கு மலிவு, விலையுயர்ந்தது என்பது பற்றி தெரியாது. இருப்பதைக் கொண்டு விளையாடும் திறமை குழந்தைகளுக்கு உண்டு. நிலத்தில் கார் மாதிரி ஓடும் பென்சில் திடீரென்று வானத்தில் விமானமாக சீறிப்பாயும்.

 

இந்தக் காலத்தில் தான் குழந்தைகளுக்கு விதம் விதமாக விளையாட்டு சாமான்கள் வருகின்றன. எங்கள் காலத்தில் ஒரு மர யானை அல்லது மாடு, அல்லது குதிரை இருக்கும். அதைக் கயிற்றில் கட்டி இழுத்துக் கொண்டு போவோம். அவ்வளவுதான்.

 

குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கும்போது ரொம்பவும் சின்ன அளவுள்ள ப்ளாக்ஸ் (blocks) வாங்காதீர்கள். குழந்தை வாயில் போட்டுக் கொண்டு விழுங்கிவிடும். அதேபோல பொம்மையின் ஓரங்கள் கூர்மையாக இல்லாமல், வழுவழு என்று இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.

 

இரண்டு வயது குழந்தை தன் அம்மா அப்பா செய்வதையெல்லாம் காப்பி அடிக்கக் கற்றுக் கொள்ளுகிறது. காப்பி பில்டரை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் காப்பி போட்டுக் கொடுக்கும். அப்பா மாதிரி ஷேவ் செய்து கொள்ளும். ஷூக்களைப் போட்டுக்கொண்டு ஆபீஸ் போகும்.

 

குழந்தைகள் தங்கள் விளையாட்டு சாமான்களுடன் விளையாடும்போது தூர நின்று பாருங்கள். நீங்கள் கூடவே இருந்து இப்படி செய், அப்படி செய் என்று சொல்லிக் கொடுக்காதீர்கள் என்கிறார் டாக்டர் ஸ்பாக். உதாரணமாக நீங்கள் ஒரு பார்பி டால் வாங்குகிறீர்கள். மாற்றிக் கொள்ள உடை, காதணிகள், காலணிகள் எல்லாம் கூடவே வருகிறது. முதலில் உள்ளாடைகளைப் போட்டுவிட்டு பிறகு மேலாடைகளைப் போட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் உகள் குழந்தை முதலில் மேலாடையைப் போடுகிறது. உடனே நீங்கள் ‘அப்படியில்லம்மா…இப்படி இதை முதலில் போடு என்று சொல்லிக் கொடுக்கிறீர்கள்’ உங்களது தலையீட்டால் குழந்தைக்கு (தானாகவே) விளையாடுவதில் ஆர்வம் குறைகிறது. பார்பி டால் மூலையில் விழுகிறது.

 

மேலே சொன்னதுபோல தானாகவே விளையாட்டு மூலம் ஆராய்ச்சி செய்து, பிறகு அதை செய்து பார்த்து கற்க விரும்புகிறது குழந்தை. அதை அதன் போக்கில் விடுங்கள். ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? எழுத ஆரம்பித்த புதிதில் எல்லா குழந்தைகளும் ‘அ’ என்ற எழுத்தை தலைகீழாகத்தான் எழுதும். இதற்கெல்லாம் பெற்றோர்கள் ரொம்பவும் கவலைப்பட வேண்டாம். தானாகவே கற்றுக் கொள்ளும் குழந்தை.

 

என் பெண்ணிற்கு இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக மருத்துவ மனையில் சேர்த்திருந்தோம். பெரிய பேரனுடன் நான் அவள் அருகில் உட்கார்ந்திருந்தேன். குழந்தை துணிகளுக்கு ஓரம் தைத்துக்கொண்டு இருந்தேன். என் பேரன் என்னிடமிருந்து கொஞ்சம் நூல் வாங்கி, மருத்துவ மனையில் இருக்கும் கட்டிலின் ஒரு கம்பியிலிருந்து இன்னொரு கம்பிக்குக் கட்டினான். அதை செய்து கொண்டிருக்கும்போது மருத்துவர் வந்தார். இவனைப் பார்த்து ‘இந்த நூலை இந்தப் பக்கத்துலேருந்து அந்தப் பக்கத்துக்குக் கட்டி என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் ராஜ்குமார் (நடிகர்) மாதிரி இந்த நூலைப் பிடிச்சிண்டு இங்கேருந்து அங்க போவேன்’ என்றான். ‘அசடு! நூல் உன்ன தாங்குமா? நூல் மெல்லிசா இருக்கே’ என்றார் மருத்துவர். நூல் மெல்லிசா இருந்தா என்னா? நான் ‘ஸ்ட்ராங்’ ஆக இருக்கேனே!’ என்றான்.

 

இதுதான் குழந்தை!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book