பிள்ளைத் தமிழ் என்பது இலக்கிய வகையில் ஒன்று. பாட்டுடை தலைவன்/தலைவியின் குழந்தைப் பருவத்தை பாடுவதுதான் இந்தப் பிள்ளைத்தமிழ்

நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பெரியாழ்வார் கண்ணனின் குழந்தைப் பருவத்தை மிகவும் அனுபவித்து யசோதையின் நிலையில் தன்னை வைத்துப் பாடுகிறார். அதில் யசோதை கண்ணனை நீராட்டத்திற்கு அழைக்கும் பாடல்கள் 10. அதில் ஒரு பாடலின் கடைசி வரிதான் ‘அழகனே நீராட வாராய்’.

குளிப்பதற்கு அடம் பிடிக்கும் குழந்தையை யசோதை எவ்வாறு தாஜா பண்ணி நீராட அழைக்கிறாள் பாருங்கள்:

‘நீ பிறந்த திருவோணம் இன்று,

நீ நீராட வேண்டும்…’

‘இன்னைக்கு உன் பிறந்த நாள், குளிக்கணும் இல்லையா?’

‘நப்பின்னைக் காணிற் சிரிக்கும்…’

‘உன் தோழி நப்பின்னை நீ குளிக்காமல் இருந்தால் சிரிப்பாளே… அவள் பார்ப்பதற்கு முன் குளித்துவிடு’

இதையெல்லாம் எதற்கு இங்கே சொல்லுகிறேன் என்றால் குழந்தையுடன் நிறைய பேச வேண்டும்.

ஒரு சின்ன பிளாஷ்பேக்:

என் முதல் குழந்தை சித்திரை மாதத்தில் (வருடப்பிறப்பு அன்று) பிறந்தாள். நல்ல வெய்யில். இரவு கூட சூடு தான். குழந்தையை கட்டிலில் சுவற்றின் பக்கம் விட்டுவிட்டு கட்டிலின் ஓரத்தில் நான் படுத்துக் கொள்வேன். மெத்தை மேல் ரப்பர் ஷீட். அதன் மேல் ஒரு துணியை போட்டு குழந்தையை விட்டிருந்தேன்.

ஒரு நாள் இரவு. பக்கத்தில் படுத்திருந்த குழந்தை நெளிந்து கொண்டே இருந்தது. குழந்தைக்கு இரண்டு பக்கத்திலும் புடவைகளை சின்ன சின்ன தலையணை போல சுற்றி அணைத்தபடி வைத்திருந்தேன். ஏன் இப்படி நெளிகிறது என்று ரொம்பவும் யோசனை ஆயிற்று. கையில் எடுத்தேன். குழந்தையின் முதுகு சூடாக இருந்தது. ரப்பர் ஷீட் சூடு!

எனக்கு மனசெல்லாம் நெகிழ்ந்து விட்டது. பாவம், வாயில்லா ஜீவன்! எப்படி தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயலுகிறது பாருங்கள். அன்றிலிருந்து குழந்தைக்கும் எனக்கும் இருந்த இடைவெளி சட்டென்று குறைந்தது. அதன் உடல் பாஷை புரிய ஆரம்பித்தது. அன்றுதான் அது என் குழந்தை என்ற ஒரு பாச உணர்வு தோன்ற ஆரம்பித்தது.

முதன்முதலாக அதனிடம் பேச ஆரம்பித்தேன்: ‘அச்சச்சோ! கோந்தைக்கு ரொம்ப ச்சூடா? அதா(ன்) இப்படி நெளிஞ்சியா? அம்மாக்குத் தெரியவே இல்லை. ச்சாரிடா கண்ணா…!’

அன்றிலிருந்து ரப்பர் ஷீட் மேல் முழு புடவையை போட்டு குழந்தையை விட ஆரம்பித்தேன். குழந்தையும் நிம்மதியாகத் தூங்கிற்று.

இனி…

சென்ற பகுதியில் குழந்தையை எப்படிக் காலில் போட்டுக் கொண்டு நீராட்டுவது என்று என் அம்மா எனக்கு சொன்னதை கேட்டீர்கள் இல்லையா?

நானும் அப்போது கேட்டுக் கொண்டேன். சொல்வது சுலபம் செய்வது கடினம் என்பார்கள் இல்லையா?

முதல் நாள் ரொம்பவும் பயந்தேன். அம்மாவை நினைத்துக் கொண்டே ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டேன். குழந்தையை காலில் போட்டுக் கொண்டு குழந்தை உடம்பில் எண்ணெய் தடவினேன். இதுவரை எல்லாம் சரி. குழந்தையை திருப்பி விட வேண்டுமே…. என் கைகளிலும் குழந்தையின் உடலிலும் எண்ணெய். வழுக்குகிறது. என் மனதிற்கு நெருங்கிய தெய்வமான ஸ்ரீரங்கம் பெருமாளை ‘ரங்கா ரங்கா’ என்று கூப்பிட்டுக் கொண்டே நிதானமாக குழந்தை தூக்கித் திருப்பிப் போட்டுக் கொண்டேன்.

என் அம்மா எனக்கு சொல்லியதை நினைவு படுத்திக் கொண்டேன்: ‘கொஞ்சம் தலையை சரியாகத் துடைக்க வில்லை என்றால் பரவாயில்லை. குழந்தை உடம்பில் துளி எண்ணெய் தங்கி விட்டாலும் பரவாயில்லை. கோழி மிதித்து குஞ்சு ஒன்றும் ஆகாது. நீ குழந்தையின் அம்மா. தைரியமாக குழந்தையை குளித்துவிடு. ஒன்றிரண்டு நாட்கள் சற்று முன்னேபின்னே இருக்கும். அதனால் மனசு வருத்தப் படாதே!’

குழந்தையை நீராட்ட எடுத்துகொண்டு போவதற்கு முன்னால் அதனிடம் சொன்னேன்: ‘அம்மா இன்னிக்கு உன்னை மொதமொதலா குளிச்சு விடப் போறேன். நீ சமத்தா இருக்கணும். கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும். நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சரியா? நா கோழி; நீ குஞ்சு, ஓகே?’

குழந்தையை காலில் போட்டுக் கொண்டு எண்ணெய் தடவி பிறகு அதனை திருப்பி விட்டுக் கொள்ளும் போதும் அதனிடம் சொன்னேன்: ‘கொஞ்சம் வழுக்காத இரு. அம்மாவும் புதுசு நீயும் புதுசு. நாம இரண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிண்டா உனக்கும் நல்லது; எனக்கும் நல்லது. சரியா?’ என் மனதில் இருந்த பயம் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.

இப்படி குழந்தையையும் நான் செய்யும் செயல்களில் ஈடுபடுத்தி அதனுடன் பேசிப்பேசி செய்ததால் சீக்கிரமே நானும் குழந்தையும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம் என்று சொல்ல வேண்டும்.

இப்போதெல்லாம் யாரும் குழந்தையை காலில் போட்டுக் குளிப்பாட்டுவது இல்லை. நிறையப் பாட்டிமார்களுக்கு முட்டிவலி; கீழே உட்கார முடிவதில்லை. அதனால் தொட்டிக் குளியல் தான். தவறு ஏதும் இல்லை. காலத்திற்குத் தகுந்தாற்போல!

நான் மிகவும் ரசித்த ஒரு தொட்டிக் குளியல் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.

எனது முதல் பேரன் பிறந்தவுடன், மருத்துவ மனையில் இருக்கும் நர்ஸ் தினமும் காலையில் குழந்தையை எடுத்துக் கொண்டுபோய் கண்ணிமைக்கும் நேரத்தில் குளிப்பாட்டிக் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். ஒரு நாள் நானும் அவருடன் போனேன். ‘காலில் போட்டுக் கொண்டு குளிப்பாட்டுவீர்களா?’ என்ற என்னைப் பார்த்து சிரித்து விட்டு ‘வாங்க நாங்க குளிப்பாட்டுறத பாருங்க’ என்றார்.

நம் சமையலறையில் இருக்கும் தொட்டியை விட சற்றே பெரிய தொட்டி.

நர்ஸ் குழந்தையின் தலை கழுத்து சேருமிடத்தை தனது இடது கை கட்டை விரல், ஆட்காட்டி விரல் இரண்டாலும் ‘கிளிப்’ செய்து கொண்டார். மற்ற விரல்கள் குழந்தையின் முதுகை தாங்கிக் கொண்டிருந்தன. குழந்தையை அப்படி இப்படித் திருப்பித் திருப்பி தொட்டியில் இருந்த நீரை வாரி வாரி இறைத்து, வலது கையால் சோப் தேய்த்து… நான் அசந்து போய் நின்றேன். குழந்தையின் பின்பக்கத்தை குளிப்பாட்ட வெகு லாவகமாக குழந்தையை திருப்பி, இப்போது குழந்தையின் கழுத்து, மார்புப் பகுதி அவரது இடது கை விரல்களுக்குள்! குழந்தைக்குத் துளிக்கூட அசௌகரியமே ஏற்படாது அவர் அந்த இளம் குழந்தையை கையாண்ட விதம்! கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

குழந்தையை அவர் தொட்டிக்குள் விடவே இல்லை. இதையெல்லாம் நான் எழுதி, நீங்கள் படிக்கும் நேரம் கூட ஆகவில்லை அந்த நர்ஸ் குழந்தையை குளிப்பாட்ட!

இது கூட ஒரு திறமை தான், இல்லையா?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book