சென்ற வாரம் படித்த ஒரு செய்தி: 17 வயதுப் பெண் ஸ்டெம்செல் தானம் அளித்துள்ளார். உலகிலேயே இந்த தானத்தை செய்துள்ள முதல் இளம் பெண் இவர். தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இரத்தப்புற்று நோய் இருப்பது தெரிந்து, அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை செய்யவேண்டும் என்பதற்காக இந்த பெண் அவருக்கு தனது ஸ்டெம்செல்லை தானம் அளித்துள்ளார். இவர் முதலில் இதைப்பற்றி தன் அம்மாவிடம் கூடச் சொல்லவில்லையாம். இந்த ஸ்டெம்செல் தானம் என்பது இரத்த தானம் போலத்தான். இரத்த தானம் கொடுப்பதற்கு முன் நமது இரத்தம் எந்தவகை, அதை பெறுபவர்களுக்கு நம் இரத்தம் ஒத்துப்போகுமா என்று பார்க்கிறார்கள் இல்லையா, அது போல ஸ்டெம்செல் தானத்திற்கு முன்பும் பல பரிசோதனைகள் உண்டு. இரத்த தானம் செய்ய பதிவு செய்துகொள்வது போலவே இந்த ஸ்டெம்செல் தானத்திற்கும் விருப்பமிருக்கிறவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

 

ஸ்டெம்செல் என்பது என்ன?

ஸ்டெம்செல் என்பது உயிரணுக்கள். இந்த உயிரணுக்கள் நமது உடம்பின் அடிப்படை ஆதார நிலைகள். இந்த ஸ்டெம்செல்கள் இரண்டு வகைப்படும். முதல்வகை embryonic stem cells (கரு உயிரணுக்கள்) இரண்டாவது வகை adult stemcells (வளர்ந்தவர்களின் உயிரணுக்கள்).

 

கரு உயிரணுக்கள்:

குழந்தை தாயின் கருவிலிருக்கும்போது குழந்தையையும், தாயையும் இணைப்பது தொப்புள் கொடி. தொப்புள் கொடி இரத்தம் என்பது குழந்தையின் தொப்புள் கொடியிலிருக்கும் இரத்தம். கொடியை வெட்டியபின் வேண்டாம் என்று தூர எறியப்படும் கொடியின் கெட்டியான பகுதிதான் திசுக்கள். தொப்புள்கொடியில் இருக்கும் இரத்தம், கொடியின் கெட்டியான பகுதிகள் இவை இரண்டிலும் இருக்கும் உயிரணுக்களே கரு உயிரணுக்கள் என்று சொல்லப்படுகின்றன.

 

குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தையும், கொடியின் திசுக்களையும் சேமித்து வைப்பதான் மூலம் குழந்தையை பலவிதமான நோய்களிலிருந்து காப்பாற்றலாம். இந்த உயிரணுக்கள் பலவிதமான தீவிர நோய்களை குணப் படுத்தும் ஆற்றல் உடையவை. ஸ்டெம் செல்கள் பலவிதமான திசுக்களாக உருவாகக் கூடிய தன்மை கொண்டவை இவை. நமது உடம்பில் நோய் காரணமாக நாம் இழக்கும் செல்களை எண்ணிலடங்கா எண்ணிக்கையில் மறுபடி உருவாக்குகின்றன இந்த ஸ்டெம் செல்கள்.

 

இந்த தொப்புள் கொடி இரத்தத்தையும், திசுக்களையும் பாதுகாப்பதன் மூலம் இரத்தப் புற்று நோய், தலசீமியா என்ற ஹீமோகுளோபின் குறைபாடு, இருதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் ஆகியவற்றை குணப் படுத்தலாம். Umbilical Cord Stem Cell Banking என்ற ஒரு அமைப்பின் மூலம் இந்த தொப்புள் கொடி இரத்தமும், கொடியின் திசுக்களும் பாதுகாக்கப்படும்.

 

எப்படி சேமிப்பது?

குழந்தை பிறப்பதற்கு சில வாரங்கள் முன்பாகவே இதனை திட்டமிட வேண்டும். பிரசவத்தின் போது குழந்தையின் கொடி இரத்தம் குழந்தை பிறந்த 10 நிமிடத்திற்குள் சேகரிக்கப் படுகிறது. இது முடிந்தவுடன் தொப்புள் கொடியிலிருந்து 25 செ.மீ. அளவிற்கு கத்தரிக்கப்பட்டு ஸ்டெம் செல்களை பிரித்தெடுப்பதற்காக பத்திரப்படுத்தப்படுகிறது. இப்படி செய்வதால் குழந்தைக்கு எந்த வித தொந்திரவும் ஏற்படாது. பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் கடுங்குளிர் முறையில் பாதுகாக்கப்படும். தேவைப்படும்போது இவற்றை நோய் தடுப்பிற்குப் பயன்படுத்தலாம்.

 

தங்கள் குழந்தைக்கு தங்களைவிட நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப் படுவார்கள். படிப்பைக் கொடுக்கலாம்; பணத்தை சேர்த்து வைக்கலாம்; பட்டம், பதவி எல்லாவற்றையும் கொடுக்கலாம் ஆனால் ஆரோக்கியம்? கருவுற்றிருக்கும் போது ஒரு பெண் தான் உட்கொள்ளும் உணவுகள் மூலம் குழந்தைக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கொடுக்க முடியும். ஆனாலும் பரம்பரை நோய்கள் குழந்தைகளை பாதிக்கும்போது கொஞ்சம் தடுமாறித்தான் போகிறோம். குழந்தை பிறந்தவுடனே குழந்தையின் ஸ்டெம்செல்களைப் பாதுகாப்பதால் பல நோய்களிலிருந்து குழந்தையைக் காப்பாற்றலாம்.

 

சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு கிடைத்த ஒரு புக்லெட் –டிலிருந்து தெரிந்த கொண்ட தகவல்கள் இவை. உங்கள் மருத்துவரிடம் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

 

இன்னொரு செய்தியும் படித்தேன். இந்த ஸ்டெம்செல்கள் மூலம் காதுகேளாமை குறையை சரிசெய்யலாம் என்பதுதான் அந்தச் செய்தி. மருத்துவத் துறை இப்போது பல வகையில் முன்னேறி இருக்கிறது. உலகின் பல நாடுகளில் வெவ்வேறு விதமான ஆராய்ச்சிகள் மருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும் நடந்து வருகின்றன.

அண்மைய ஆராய்ச்சி ஒன்று முளைக் கருவின் ஸ்டெம்செல்லைப் (embryonic stem cells) பயன்படுத்தி காது கேளாமையை குணப்படுத்த ஒரு சிகிச்சைமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று கூறுகிறது. இந்த ஆராய்ச்சி முதல்முறையாக எலி இனங்களில் செய்யப்பட்டிருக்கின்றது. காது கேளாத எலிகளுக்கு இந்த சிகிச்சையை செய்து அவைகளுக்கு கேட்கும் திறனை மீட்டுக்கொடுத்திருக்கிறார்கள். இந்த வெற்றியால் மனிதர்களுக்கும் கேட்கும் திறனை உண்டு பண்ண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள்.

மனிதர்களுக்கு இந்த சிகிச்சை முறை பயன்பட இன்னும் பல வருடங்கள் ஆகலாம். எத்தனை பேர்களுக்கு இந்த ஸ்டெம்செல் சிகிச்சை பலனளிக்கும் என்பது இன்னும் சரிவரத் தெரியவில்லை. ஆனால் இந்த ஸ்டெம்செல் சிகிச்சை ஏற்கனவே இருக்கும் சிகிச்சை முறைகளை இன்னும் விரிவுபடுத்த உதவும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book