சமீபத்தில் செய்தித் தாளில் வந்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டு பிறகு குழந்தையின் வளர்ச்சியைப் பார்க்கலாம், சரியா?

குழந்தை இல்லாத தம்பதிகள் IVF முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது தெரிந்த விஷயம்.

IVF பற்றிப் படிக்க:

IVF – Eeva (Early Embroyo Viability Assessment)

இந்த முறையில் இப்போது time-lapse photography என்கிற புதிய உத்தியின் படி குழந்தை பிறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சோதனைச்சாலையில் வளரும் கருமுட்டைகளின் வளர்ச்சியை ஒரு புகைப்படக் கருவி ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுக்கிறது. இதனால் எந்தக் கருவிற்கு குழந்தையாகும் தன்மை அதிகம் என்று துல்லியமாக அறிய முடிகிறது. இந்தமுறையை Eeva (Early Embroyo Viability Assessment) என்கிறார்கள். உலகிலேயே முதல் முறையாக திருமதி ருத் கார்டர் என்பவருக்கு இந்த முறைப்படி ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் ‘Colic pain’ பற்றிக் கேட்டிருந்தார்.

colic என்பது குழந்தை பால் குடிக்கும் போது கூடவே உள்ளே போகும் காற்று குழந்தையின் வயிற்றில் சேர்ந்துவிடுவது தான். அந்தக் காற்றை ஏப்பம் விடச்செய்வதன் மூலம் வெளியேற்றிவிட்டால் இந்த வலி போய்விடும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காற்று அதிகம் உள்ளே போக வழி இல்லை என்றாலும், தாயின் உணவு பழக்கத்தினால் குழந்தை பாதிப்புக்கு உள்ளாகலாம். தாய் அதிகமாக கிழங்கு வகைகளை உட்கொண்டாலோ, இரவு அதிக நேரம் கழித்து உண்டதால் உணவு சரியாக ஜீரணம் ஆகவில்லை என்றாலோ, குழந்தைக்கு வயிற்றில் காற்று சேர வாய்ப்பு ஏற்படும். குழந்தைக்கு அடிக்கடி இதுபோல காற்று சேர்ந்து வலி வருகிறது என்றால் அம்மா தனது உணவில் கவனம் செலுத்தவேண்டும். நிறைய நார்சத்துள்ள உணவுகள், கீரை பழங்கள், முளைகட்டிய பயறு வகைகள் என்று சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். வெற்றிலை பாக்கு போடுவதும் பலன் தரும்.

தாய்ப்பால் இல்லாமல் வேறு பால், அதுவும் புட்டியில் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த colic வலி வருவது சற்று அதிகம்தான். புட்டியில் இருக்கும் காற்றை பாலுடன் குழந்தை உறிஞ்சுவதால் நிறைய காற்று குழந்தையின் வயிற்றினுள் உள்ளே போகிறது. குறைக்க சில வழிகள்:

• பாட்டிலில் பயன்படுத்தும் ரப்பர் நிப்பிளில் சின்னதாக ஓட்டை போடுவது.

• குழந்தை வாயில் பாட்டில் இருக்கும்போது நிப்பிளில் பால் எப்போதும் நிரம்பியிருக்குமாறு பாட்டிலை சாய்த்துப் பிடித்துக் கொண்டு பால் கொடுப்பது.

• பால் தீர்ந்தவுடனே குழந்தையின் வாயிலிருந்து பாட்டிலை எடுத்துவிடவது.

• ஒவ்வொருமுறை குழந்தை பால் குடித்து முடித்த பின்னும், குழந்தையை தோளில் போட்டு கொண்டு அதன் முதுகை தடவி, அல்லது லேசாகத் தட்டி காற்றை வெளியேற்றுவது. இதற்கு மிகுந்த பொறுமை வேண்டும். சில சமயம் குழந்தை ஏப்பம் விட்டுவிட்டது என்று நினைத்துக் கொண்டு படுக்க வைத்தால், சற்று நேரத்தில் விழித்துக்கொண்டு அழ ஆரம்பிக்கும். உடனே எடுத்து தோளில் போட்டுக்கொண்டு தட்டினால் ஏப்பம் வரும். சிலசமயம் மலம் கழிக்கும்போது கூட காற்று வெளியேறும்.

• இப்போது மருத்துவர்கள் கிரைப் வாட்டர் கொடுக்கக் கூடாது என்கிறார்கள். சற்று பொறுமையுடன் தோளில் போட்டுத் தட்டுவது நல்லது.

இந்த colic வலி எல்லாக் குழந்தைகளிடமும் இருக்கும். பெற்றோர்கள் பதட்டப் படாமல் இருந்து, இது பொதுவான ஒன்றுதான் என்று புரிந்து கொண்டாலே பாதித் தீர்வு கிடைத்துவிடும். 3 மாதங்களில் இந்த வலி சரியாகிவிடும்.

டாக்டர் ஸ்பாக் மேலும் கூறுவது:

குழந்தையை குப்புறப் படுக்க விடலாம். அல்லது அம்மாவின் கால் மேல் குப்புற படுக்க விட்டு முதுகை மெல்ல நீவலாம்.

2 மாதக் குழந்தையின் வளர்ச்சி:

ஒரு மாதத்திற்குள் குழந்தை இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கும். தினமும் நீராட்டுவதால் சருமம் ஈரப் பசையுடன் இருக்கும். எங்கெங்கோ பார்த்த கண்கள் நிலையாக ஒரு பொருளைப் பார்க்க ஆரம்பித்திருக்கும். நீங்கள் அதன் முகத்தைப் பார்க்கும்போது அதுவும் உங்களைப் பார்க்கும். அதேபோல உங்கள் சிரிப்பிற்கும் பதில் சிரிப்பு எப்போதாவது கிடைக்கும். ரொம்பவும் ஆடிக் கொண்டிருந்த தலை சற்று குறைச்சலாக ஆடும். ஆனாலும் தலையை பிடித்துக் கொண்டுதான் குழந்தையை எடுக்க வேண்டும்.

குழந்தையிடம் ஒரு பொருளை நீட்டினால் அதை எட்டிப் பிடிக்கப் பார்க்கும். குழந்தையுடன் பேசுங்கள். இத்தனை நாள் தூக்கம் விழித்து பட்ட கஷ்டமெல்லாம் அதன் சிரிப்பில் மறைந்தே போய்விடும்.

என்னதான் சின்னக் குழந்தை என்றாலும், அதற்கென்று சில விருப்பு வெறுப்புகள் இருக்கும். சில குழந்தைகள் தனியாக இருக்காது. யாராவது நடமாடிக்கொண்டு இருந்தால் பேசாமல் படுத்துக் கொண்டிருக்கும். ஆளரவம் இல்லையென்றால் அழும்.

எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது கூட்டுக் குடும்பத்தில் இருந்தேன். கூடத்தில் என் மாமனார் ஒரு ஈசி சேரில் உட்கார்ந்திருப்பார். சமையலறையில் வேலை செய்யும்போது அவர் பக்கத்தில் குழந்தையை விட்டுவிடுவேன். அவர் குழந்தையுடன் பேசிக் கொண்டிருப்பார்.

இரண்டாவது குழந்தைக்கு இந்த சுகம் கிடைக்கவில்லை. நாங்கள் தனிக் குடித்தனம் வந்துவிட்டோம். ஆளில்லை என்றால் குழந்தை சிணுங்க ஆரம்பித்துவிடும். அதனால் அவனை சமையலறையிலேயே விட்டுக் கொள்ளுவேன். அவனுடன் பேசிக் கொண்டே சமையல்செய்வேன்.

‘இன்னிக்கு என்ன தளிகை (சமையல்) தெரியுமா? கத்திரிக்காய் ரசவாங்கி, சுட்ட அப்பளாம். உனக்குப் பிடிக்குமா?’

‘ங்கா…’ என்று பதில் சொல்லும் குழந்தை.

ஒருநாள் வாணலில் ஏதோ வதக்கிக் கொண்டிருந்தவள் ‘டங்’ கென்று கரண்டியை வாணலியில் தட்ட ‘ஒய்ங்…’ என்று குழந்தை அழத்தொடங்கிவிட்டது!

 

‘அச்சச்சோ!, நீ இங்கு இருப்பதையே மறந்துவிட்டேன்! ரொம்ப சத்தம் போட்டுட்டேனா? ச்ச்சாரி டா கண்ணா…?’ என்று அதை சமாதானப்படுத்தினேன்.

பொதுவாக ஓரிரண்டு மாதக் குழந்தைகளுக்கு அழும்போது கண்களில் நீர் வராது. கண்ணீர் சுரப்பிகள் வளர்ந்திருக்காததுதான் காரணம்.

விக்கல்: பொதுவாக இளம் குழந்தைகளுக்கு அடிக்கடி விக்கல் வரும். அவர்களது ஜீரண உறுப்புகள் வளர்ந்து வருவதுதான் என்று நம் ஊரில் சொல்வார்கள். ரஜினிகாந்த் சொல்வது போல ‘விக்கல் தானா வரும் தானா நிற்கும்’. நாம் ஒன்றுமே செய்ய வேண்டாம்.

கக்கல்: விக்கலைப் போலத்தான் கக்குவதும். ஒவ்வொரு முறை பால் குடித்த பின்னும் சில குழந்தைகள் கக்குவார்கள். இது பயப்படும்படியானது அல்ல. சிறிய அளவில் கக்குவது சகஜம்தான். இளம்தாய்க்கு தன் குழந்தை சாப்பிட்ட பால் அனைத்தையும் கக்கி விட்டது போலத் தோன்றும். ஆனால் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும்போது இதுபற்றிக் கவலை வேண்டாம்.

வாந்தி: சில குழந்தைகள் பலமுறை வாந்தி எடுப்பார்கள். இது வழக்கமாக ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும். சரியாக ஏப்பம் விடவைக்கவில்லை என்றால் கூட சில குழந்தைகள் வயிற்றில் இருக்கும் காற்றுடன் கூட நிறைய பாலையும் வெளியேற்றிவிடுவார்கள்.

இந்த மாதத்தில் குழந்தை தன் கையில் பிடித்திருக்கும் ஒரு பொருளை உற்று கவனிக்கும் போது கண்கள் மாறு கண் போலத் தோன்றும். குழந்தையின் பார்வை இன்னும் நிலைப்படாததால் இப்படி ஆகிறது. கண் மற்றும் கை இவற்றின் ஒத்திசைவு இன்னும் முழுமையடையவில்லை என்று பொருள். இந்த நிலை பல மாதங்களுக்கு நீடிக்குமானால் ஒரு கண் மருத்துவரை அணுகவும்.

மார்பக வீக்கம்

பல ஆண், மற்றும் பெண் குழந்தைகளுக்கு பிறந்தவுடன் சில நாட்களுக்கு மார்பகம் லேசாக வீங்கி இருக்கும். சில சமயங்களில் இவற்றிலிருந்து பால் போன்ற திரவம் வெளி வரும். இதுவும் பொதுவானதுதான். நாட்பட நாட்பட இந்த வீக்கம் தானாகவே குறைந்து விடும். அந்த இடத்தை கையினால் தொடுவதோ, வீக்கம் வடியட்டும் என்று அமுக்குவதோ கூடாது. இதனால் தொற்றுநோய் ஏற்படும்.

அடுத்த வாரம் மறுபடி பார்க்கலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book